சிவபுராணம் பாடல் வரிகள் ,விளக்கம் மற்றும் பலன்கள் pdf / Sivapuranam lyrics in tamil pdf

Download Now
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பாடல் வரிகள்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பாடல் வரிகள்

சிவபுராணம் தமிழில்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க !
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க !
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க !
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க ! 5 

விளக்கம்

நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

வேகங் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க ! 
பிறப்புறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க ! 
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க ! 
கரங்குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க ! 
சிரங் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ! 10

விளக்கம்

என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும்.பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும்.தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள)பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும்.கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும்.தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.

ஈசன் அடி போற்றி ! எந்தை அடி போற்றி ! 
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி ! 
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி ! 
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி ! 
சீரார் பெருந்து நம் தேவன் அடி போற்றி ! 15

விளக்கம்

எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி.எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி.மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி.அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.

ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் 
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை 
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான் 20

விளக்கம்

அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள்.சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால் அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.

கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து
மண்ணிறைந்துமிக்காய் , விளங்கொளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே ! நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் 25

விளக்கம்

நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன்.சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று,வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும்,அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! - உன் பெரிய பெரிய தன்மைகளை மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் 30

விளக்கம்

புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும்,வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும் இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே !

Also read - karthika puranam in tamil day 13 pdf

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் !
மெய்யே உன் பொன்னடிகள் கண்டுஇன்று வீடுற்றேன் :
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற 
மெய்யா ! விமலா ! விடையப்பாகா ! வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ! 35

விளக்கம்

உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேன்.நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந்த உண்மைப் பொருளே ! காளையை ஓட்டி வருபவனே ! வேதங்கள் "ஐயா !" எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் பலபல தன்மைகளைப் பெருகி ஆராய்ந்தும் காண முயலுகின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே !

வெய்யாய் தணியாய் இயமான னாம் விமலா ! 
பொய்யா யின வெல்லாம் போயகல வந்தருளி 
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே ! 
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே ! 
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ! 40

விளக்கம்

வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே.
என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே !பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து,உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே !எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே !அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே !

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும் 
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே !
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே ! 45

விளக்கம்

தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே ! நீ உலகங்களையெல்லாம்
தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய்(இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய்,உயிர்களை மாயைக்குள் போக்குவாய் ! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய்.மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூக்ஷ்மமான) பொருளே !வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே !சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே !

கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் !
நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

விளக்கம்

அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று, இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே !ஐந்நிறமும் நீயே ஆனாய் ! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக மறைந்திருந்தாய், எம்பெருமானே !

மறைந்திட மூடிய மாய இருளை 
அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55

விளக்கம்

கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை மறைத்து மூடிய மாயையாகிய இருளினை செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது என்னும் விதிகளால் கட்டி, மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப்போவதாகவும், அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து,மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடலை வைத்துக்கொண்டு மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற.

விலங்கு மனத்தால் விமலா உனக்குக் 
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் 
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி 
நிலந்தன் மேல் வந்தருளி நீர் கழல்கள் காட்டி 
நாயிற்கடையாய்த் கிடந்த அடியேற்குத் 60

விளக்கம்

ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம் கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய என்க்கும் அருள்செய்து,இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து, உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி,நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப் பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான தத்துவப் பொருளே !

தாயிற்சிறந்த தயாவான தத்துவனே !
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே !
தேசனே ! தேன் ஆர் அமுதே ! சிவபுரனே !
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே ! 
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப் 65

விளக்கம்

குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே !
ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தை உடையவனே பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய,என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே !

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆராஅமுதே ! அளவிலாப் பெம்மானே !
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே !
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே !
இன்பமும் துன்பமும் இல்லானே , உள்ளானே !  70

விளக்கம்

தெவிட்டாத அமுதமே ! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே !ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே ! (என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே ! இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே ! உள் நிற்பவனே !

அன்பருக்கு அன்பனே ! யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே , துன்னிருளே ! தோன்றாப் பெருமையனே ! 
ஆதியனே ! அந்தம் நடுவாகி அல்லானே !
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே !
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருங்கி 75

விளக்கம்

அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவாயவனே !எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே !சுடருருக்கொண்டவனே ! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே ! பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே !முதலாக இருப்பவனே ! இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும் ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே !(காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக -அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே !உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய சிந்தையின் பார்வை வியத்தற்கு உரிய பார்வை ! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே

நோக்கரிய நோக்கே ! நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே !
காக்கும் எம் காவலனே ! காண்பரிய பேரொளியே !
ஆற்றின்ப வெள்ளமே ! அத்தாமிக்காய்நின்ற 
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80

விளக்கம்

நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணிய மூர்த்தியே !என்னைக் காக்கின்ற காவல் தெய்வமே ! காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே !தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே ! தந்தையே ! மிகுதியாக நின்ற ஒளி வீசும் சுடரான தோற்றத்தினனாய், சொல்லப்படாத பூடகமான நுண் உணர்வாக இருந்து

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்த றிவாம்
தேற்றனே ! தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே | உடையானே !
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா ! அரனேஒ ! எனறென்று 85

விளக்கம்

இவ்வுலகில் பல்வேறு விதங்களில் கூறப்பட்டு, மெய்யறிவாக ஆகும்
(ஆய்வின் இறுதியில் சாறாகத் தேறும்) தேற்றமே !அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே ! என்னுடைய சிந்தனையினுள் உண்பதற்க்கு மிகவும் அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே ! என்னை உடைமையாக ஆள்பவனே ! பலவேறு விகாரங்களை உடைய ஊனால் (சதையால்) ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்க இயலவில்லை, எம் தலைவா ! அரனே ! ஓ ! என்று பலவாறு

போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே !
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே !
தில்லையுள் கூத்தனே ! தென்பாண்டி நாட்டானே ! 90

விளக்கம்

போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள் மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில் சிக்குறாது மாயையால் ஆன இவ்வுடலின் கட்டுமானத்தை அழிக்க வல்லானே ! வேறு எதுவுமற்றதாகிய இருளில் கூத்து ஆடுகின்ற நாதனே ! தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆடுபவனே ! தென்பாண்டி நாட்டை உடையவனே !

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து . 95

விளக்கம்

அல்லல் நிறைந்த பிறவியை நீக்குவானே ! ஓ ! என்று சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, (இறைவன்) திருவடியை பணிந்து அதன் கீழிருந்து சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள்,பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி… 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!

 திருச்சிற்றம்பலம்!!!

you may also refer to 12jothirlinga namaavali places click here

சிவபுராணம் என்றால் என்ன? 

சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும்.திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படுகிறது. சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு இன்னிசைக் கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விவரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!!!

அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

THIRUVEMPAAVAI LYRICS in tamil PDFCLICK HERE

11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 சிறப்பு - 1 நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13. சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும்.

14. சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும்.

15. சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் போற்றி என முடியும்.

16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார்.

இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18. திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19. ரமண மகிஷி , திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

SHRI VAIDHIYANATHA ASTAKAM TAMIL PDF CLICK HERE

21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்

ஓம் நமச்சிவாய.

திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்...!

Download Now

Post a Comment

1 Comments

  1. 🙏🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏மிக்க நன்றி RADMI NOTES. 😊

    ReplyDelete